வெள்ளி, செப்டம்பர் 8

கே ஜீவபாரதி அவர்களின் நேர்காணல் கட்டுரை - தியாக சீலர் தோழர் எஸ்.ஏ.முருகையன்.

தியாக சீலர் ஆம்பலாபட்டு தோழர் எஸ்.ஏ.முருகையன்.


(கே ஜீவபாரதி அவர்களின்  நேர்காணல் கட்டுரை)

ஒட்ட வெட்டிய தலைமுடி... உருவத் தோற்றத்திற்குக் கம்பீரத்தைக் கூட்டும் சிவப்புத் துண்டு... ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியருக்கான தோற்றம்... இதுதான் தோழர் எஸ்.ஏ.முருகையன். எண்பது வயதானவர் என்று எண்ண முடியாத அளவுக்குப் பேச்சும் செயலும். இதோ! ஆம்பலாப்பட்டில் பிறந்த அக்கினிக் குஞ்சுகளில் ஒருவரான தோழர் எஸ்.ஏ. முருகையன் என் வினாக்களை நேர் கொண்டு விடை தருகிறார்.


நீங்கள் பொதுவாழ்க்கைக்கு வந்த பின்னணி பற்றிச் சொல்லுங்கள்...

இந்த ஊரில் பிறந்து சிங்கப்பூரில் வாழ்ந்து கொண்டிருந்த மு.அ.குழந் தையன் சேனாதிபதியும், அய்யாவுத் தேவரும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருந்த புண்ணிய கதிரேசன் மாதுராரும் 1937 ஆம் ஆண்டில் இந்த ஆம்பலாப்பட்டுக்கு வந்தனர்.



மு.அ.குழந்தையன் சேனாதிபதியும், அய்யாவுத் தேவரும் சிங்கப்பூரில் வாழ்ந்தபோதே பகுத்தறிவுச் சிந்தனை யாளர்களாகவும், தந்தை பெரியார்மீது பற்றுக் கொண்டவர்களாகவும் இருந் திருக்கின்றனர். அதே பற்றுடன் அவர் கள் இருவரும் ஆம்பலாப்பட்டுக்கு வந்தனர்.

இலங்கையிலிருந்து இந்த ஊருக்கு வந்த புண்ணிய கதிரேசன் மாதுரார் ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமை மிக்கவராகவும், அறிவாற்றல் மிக்க வராகவும் திகழ்ந்தார்.

1938  - ல் புண்ணிய கதிரேசன் மாதுரா ருக்கும் தைலம்மைக்கும் பகுத்தறிவு முறைப்படி திருமணம் நடந்தது. தாலி கட்டாமல் மணமக்கள் மாலை மட்டும் மாற்றிக் கொண்டனர். ஆம்பலாப்பட்டு கிராமத்தில் நடந்த முதல் பகுத்தறிவுத் திருமணம் இதுதான். அப்போது எனக்கு வயது 12. இந்தச் சம்பவம் என் சிறு வயதிலேயே ஆழமாகப் பதிந்து விட்டது.

குழந்தையன் சேனாதிபதி, புண்ணிய கதிரேசன் மாதுரார், பூவணம் என்ற கிராமத்தில் பிறந்து ஆம்பலாப்பட்டில் இருந்த தன்னுடைய அக்காள் வீட்டில் தங்கியிருந்த முத்துக்காமாட்சி, அய்யாவுத் தேவர் ஆகியோர் 1939 - ல் ஆம்ப லாப்பட்டில் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினர். அப்போது 16 பேர் காங் கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். அதில் நானும் ஒருவன். இப்படித்தான் என்னு டைய பொதுவாழ்க்கை தொடங்கியது.

பட்டுக்கோட்டை ஜமீன் ஒழிப்பு மாநாடு பற்றி...

1943 - ல் ஒரே சமயத்தில் இந்த ஊரில் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையும், விவ சாய சங்கமும் அமைக்கப்பட்டது. இரண்டிற்கும் புண்ணிய கதிரேசன் மாதுரார் செயலாளராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார். செயலாளர் பொறுப்பேற்ற தும் 'புண்ணிய' என்ற அடைமொழியும், 'மாதுரார்' என்ற சாதிப் பெயரும் நீக்கப் பட்டு 'தோழர் சி.கதிரேசன்' என்று அழைக்கப்பட்டார்.


1946 - ல் பட்டுக்கோட்டையில் ஜமீன் இனாம் ஒழிப்பு மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. பாப்பாநாடு ஜமீன் தார், மதுக்கூர் ஜமீன்தார், அத்திவெட்டி ஜமீன்தார், சேத்தன்குடி ஜமீன்தார், பட்டுக்கோட்டை நாடிமுத்துப் பிள்ளை ஆகியோருடன் காங்கிரஸ்காரர்களும், நில உரிமையாளர்களும் இணைந்து பட்டுக்கோட்டை ஜமீன் இனாம் ஒழிப்பு மாநாட்டைத் தடுக்கப் பெரும் முயற்சி எடுத்தனர். இதை அறிந்த நாங்கள் ஆம்பலாப்பட்டு மக்களைத் திரட்டிக் கொண்டு, கரம்பயம் மக்களையும் இணைத்துக் கொண்டு மாநாட்டிற்குச் சென்றோம்.

பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் ஆயிரக் கணக்கான மக்கள் ஆர்வத் துடன் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பெண்களும் எழுச்சி யுடன் கலந்துகொண்டது எதிரிகளை குலை நடுங்கச் செய்தது. எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து மிகச் சிறப்பாக பட்டுக்கோட்டை ஜமீன் இனாம் ஒழிப்பு மாநாடு நடந்து முடிந் தது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட முதல் தீர்மானம் 'வெள்ளையனே வெளியேறு' என்பதாகும். இந்த மாநாட்டின்போது ஆம்பலாப்பட்டு, கரம்பயம் மக்களால் பட்டுக்கோட்டை நகரம் முழு வதுமாக முற்றுகையிடப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்.



சாதியக் கொடுமைகளை எப்படி எதிர்கொண்டீர்கள்?

சாணிப்பால், சவுக்கடி கொடுமைகள் ஆம்பலாப்பட்டில் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. ஆனால் தீண்டாமை போன்ற இழிநிலைகள் இங்கும் இருந் தன. மணநாளன்று மணமகன் குதிரை யில் வலம் வருவது இந்த ஊர் வழக் கம். இது தாழ்த்தப்பட்டவர்களுக்கு இந்த ஊரில் மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து நம் கட்சியும், விவசாய சங்க மும் போராடி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மணமகனும் குதிரையில் மண நாளன்று ஊர்வலம் வர அனுமதி வாங்கித்தந்தது.


பட்டுக்கோட்டை தாலுகா தாழ்த்தப்பட்டோர் லீகின் செயலாளராக 1947 ஆம் ஆண்டில் பொறுப்பு வகித்த ஆம்பலாப் பட்டு தோழர் பி. கோவிந்தசாமியைக் கொண்டு, அந்த அமைப்பின் மாநாட்டை ஆம்பலாப்பட்டு குடிக்காட்டில் நடத்த முடிவு செய்தது. இந்த மாநாட்டில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த தோழர்கள் ஆறுமுகம், சி.கதிரேசன், ஆகியோருடன் நானும் கலந்துகொண்டேன். இதை விரும்பாதவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியை வெறுப்பவர் களும், சாதிப்பித்துக் கொண்டவர் களும் ஒன்றிணைந்து தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் கலந்து கொண்ட எங்களை ஊர்க் கட்டுப்பாடு என்ற போர்வையில் ஒதுக்கி வைக்க முயன் றனர். நம் கட்சிக்கும், விவசாய சங்கத் திற்கும் அன்று இருந்த செல்வாக்கால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.




பொங்கல் பண்டிகையின்போது பிற சாதியினர் வீடுகளில் அடுப்பு தயார் செய்து கொடுத்தல், குப்பை கூளங் களைச் சுத்தம் செய்தல் போன்ற பணி களில் தாழ்த்தப்பட்டவர்கள் ஈடுபடுத் தப்பட்டனர். அத்தகைய பணிகளைச் செய்த அவர்களுக்குச் சோறு மட்டும் தான் கூலியாகக் கொடுக்கப்பட்டது. டீ கடைகளில் தனி டம்ளர் முறை இருந் தது. கோயில்களுக்குள் அரிஜன மக்கள் நுழைவதற்குத் தடையும் இருந் தது. இவை அனைத்தையும் நம் கட்சி யும் விவசாய சங்கமும் எதிர்த்துப் போராடி தலித் மக்களுக்குச் சம உரிமையை வாங்கித் தந்தது.



அடக்குமுறை காலத்தில் நீங்கள் அனுபவித்த கொடுமைகள் பற்றி...

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இந்தி யாவில் தடை செய்யப்பட்டதும், தலை வர்கள் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டனர். ஆம்பலாப்பட்டிற்கு அருகில் இருக்கும் செம்பாளூர்க் காடு களில் கட்சி ஊழியர்களுக்கு அரசியல் வகுப்பும், போராட்டப் பயிற்சியும் தலை வர்களால் கொடுக்கப்பட்டது.


இதை அறிந்த செம்பாளூர் நிலச்சு வான்தாரும், காங்கிரஸ் கட்சிக்காரரு மான சாம்பசிவ ஐயர் கம்யூனிஸ்டு களைக் காட்டிக் கொடுக்க முயன்றார். தோழர்கள் இரணியன், ஆறுமுகம், ரகுநாத வன்னியர் ஆகியோருடன் இணைந்து சாம்பசிவ ஐயரின் முயற் சியை முறியடிக்க நினைத்தோம். இந்தக் காலகட்டத்தில் தோழர்கள் ஏ.கே.கோபாலன், அனந்த நம்பியார், பி.இராமமூர்த்தி, எம்.வி.சுந்தரம், மணலி கந்தசாமி, பி.சீனிவாசராவ், எம்.காத்தமுத்து, எம்.மாசிலாமணி ஏ.வி.ராமசாமி, கே.பி.நடராசன், ஏ.எம்.

கோபு போன்ற மத்திய, மாநில, மாவட்ட கட்சித் தலைவர்கள் எங்களுக்கு வழி காட்டினர்.

போலீசுக்கு கம்யூனிஸ்டுகளைக் காட்டிக் கொடுக்க முயன்ற சாம்பசிவ ஐயரின் வீடு தாக்கப்பட்டது. இதைக் காரணமாகக் கொண்டு தன்னைக் கொலை செய்ய முயன்றதாகவும், வீட்டுப் பொருட்களைக் கொள்ளையடிக்க முயன்றதாகவும், அரசுக்கு எதி ராகச் செயல்படத் திட்டமிடுவதாகவும் ஆம்பலாப்பட்டுக் கிராமத்தைச் சேர்ந்த 68 பேர்மீது சாம்பசிவ ஐயர் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு அரசு வழக் காக மாற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவர் களைக் கைது செய்வதற்காக சிறப்புக் காவல்படை ஆம்பலாப்பட்டை முற்று கையிட்டது. போலீசார் ஊருக்குள்  புகுந்து மிருகத்தனமாக அடக்குமுறை களைச் செய்தனர்.


தோழர்கள் இரணியன், ஆறுமுகம், வெ.அ.சுப்பையன், டி.காசிநாதன் ஆகியோருடன் நானும் தலைமறைவானேன். இராணியன், ஆறுமுகம், மணலி கந்தசாமி ஆகியோருடன் நானும் ஆம்பலாப்பட்டில்தான் தலை மறைவாக இருப்பதாக நினைத்து எங்களை உயிருடனோ பிணமாகவோ பிடிக்கப் போலீசார் முயன்றனர். இதைச் செய்பவர்களுக்கு ரூபாய் 500 பரிசளிப்பதாகவும் அறிவித்தனர். தோழர்கள் வெ.அ.சுப்பையன் டி. காசி நாதன் ஆகியோர் வீட்டையும், என் வீட்டையும் போலீசார் தாக்கி இடித்துத் தள்ளினர்.


கரம்பயம், கீழக்கோட்டை ஆகிய பகுதி களில் தலைமறைவாக இருந்தேன். இந்தக் காலகட்டத்தில்தான் சிங்கார வேலரின் 'மார்க்சிய மெஞ்ஞானம்' என்ற நூலைப் படித்துத் தெளிவு பெற் றேன். தலைமறைவாக இருந்த என்னை என் தந்தை வந்து சந்தித்து என்னை மனமாற்றம் செய்ய முயன் றார். "எனக்குச் சேரவேண்டிய சொத்து களை தங்கைக்குக் கொடுத்து விடுங் கள். நான் உயிரோடு மீண்டு வந்தால் உங்களைச் சந்திக்கிறேன்" என்று சொல்லி என் தந்தையை அனுப்பி வைத்தேன். ஆம்பலாப்பட்டுப் பகுதி


யிலிருந்து தலைமறைவாக சென்னைக்குச் சென்றேன். இங்கு தான் தோழர்கள் வெங்கடேச சோழகர், மதனகோபால், மங்களசாமி பி.சீனி வாசராவ் ஆகியோர் தொடர்பு எனக்கு ஏற்பட்டது.


மூன்றரை ஆண்டு தலைமறைவு வாழ்க்கை முடிந்து 1953 பிப்ரவரி 23 அன்று தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜரா னேன். ஒருவாரம் விசாரணை நடந் தது. நான் ஆளான மூன்றாம் நாள் என் தந்தை இறந்தார். 37 - வது நாள் சென்னை உயர்நீதிமன்றம் எனக்கு ஜாமீன்  வழங்கியது.






குறிப்பு: மேற்கண்ட சில படங்களை தவிர மற்ற செய்திகள் https://kallarkulavaralaru.blogspot.com என்ற வலைதளத்தில் இருந்து எடுக்கபட்டது.